நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தனா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. நீண்ட காலமாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், திருமணத்திற்கு முன்பான கொண்டாட்டக் காட்சிகள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மந்தனா இணைந்து கீதா கோவிந்தம் (2018), மை டியர் காம்ரேட் (2019) போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஜோடியாக மாறினர். மேலும், இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகவுள்ள ரணபலி படத்திலும் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.
இருவருக்கும் பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூர் கோட்டையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிந்தைய வரவேற்பு விழாவை ஹைதராபாத்தில் மார்ச் 4 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருவதாகவும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச் வாலிபால் விளையாடும் வீடியோவை பகிர்ந்ததுடன், ரஷ்மிகா மந்தனாவும் வரவேற்பு அழைப்பிதழ் மற்றும் விருந்தினர் ஏற்பாடுகளை குறிக்கும் பதிவுகளை ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். திருமணத்திற்கு முன் கொண்டாட்ட தருணங்கள் என கூறப்படும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

Leave feedback about this